சென்னையை அடுத்த பரங்கிமலை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் முத்துசெல்வன். இவர் அண்ணாநகரில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம் வழியாக முத்துச்செல்வன் வந்து கொண்டிருந்தார். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் முதியவர் ஒருவர் மதுபோதையில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்தார். இதை பார்த்த முத்துசெல்வன் அந்த முதியவரை எச்சரித்து போக்குவரத்தை சீரமைத்தார்.

அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இறங்கிய ஒருவர், இதை செய்வதற்கு நீ யார்? என்று கூறி போலீஸ்காரர் முத்துசெல்வனின் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்துவிட்டு தப்பி ஓடினார்.
அந்த நபர் அமைந்தகரையை சேர்ந்த கண்ணன் (44) என்பதும், தி.மு.க. பிரமுகரான அவர் அதேபகுதியில் டாஸ்மாக் கடை அருகில் ‘பார்’ நடத்தி வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. கண்ணனை கைது செய்த போலீசார், அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.