சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையிலான ரயில் சேவை இன்று முதல் ரத்து

எழும்பூர் கடற்கரை இடையே 4 வது பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று 279 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரை இடையே மேம்பால ரயில்கள் இன்று முதல் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது.

இதே போல், கடற்கரையில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், கும்மிடிப்பூண்டி, ஆவடி, அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்ல வேண்டிய 59 மின்சார ரயில் சேவைகள் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்பட உள்ளன.

கடற்கரையில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் பாதிக்காத வகையில் கூடுதலாக மாநகர பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் சென்ட்ரல், கோட்டை, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் நூற்றுக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News