திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சூழலில் யூடியூபர் டிடிஎப் வாசனும் அவரது நண்பர்களும் திருப்பதியில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம் பிராங்க் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கினார்.
சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்த போது கதவை திறந்து விடும், தேவஸ்தான ஊழியர் போல நடித்து பிராங்க் செய்துள்ளனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனை பிராங்க் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் டிடிஎப் வாசனின் நண்பர் பதிவேற்றம் செய்திருந்தார்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் டிடிஎப் வாசன் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த சம்மன் தொடர்பாக டிடிஎப் வாசனின் வழக்கறிஞர், திருமலை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அதனை ஏற்க மறுத்த போலீசார், டிடிஎப் வாசன் நேரில் வந்து ஆஜராகுமாறு வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளனர்.