அரசியல்
புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய் சந்திரசூட் நியமனம்!
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், நவம்பர் 9-ம் தேதி பதவியேற்கிறார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித்தின் பதவிக்காலம் நவம்பர் 8-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட்டை நியமிக்க, நீதிபதிகள் நியமனத்திற்கான கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதை ஏற்று, இந்திய அரசியல் அமைப்புச் சட்ட அதிகாரத்தின்படி, புதிய தலைமை நீதிபதியாக, சந்திரசூட்டை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
இதை மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சந்திரசூட் நவம்பர் 9-ம் தேதி, தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார் என்று குடியரசுத் தலைவர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வரலாற்றில் தந்தையும் மகனும் தலைமை நீதிபதியாக பதவி வகித்தது, இதுவே முதல்முறை. டி.ஒய். சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி. சந்திரசூட் கடந்த 1978-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டுவரை தலைமைநீதிபதியாக பதவிவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login