இந்தியா
ஜெய் ஸ்ரீ ராம் வாசகம் சொன்ன காங்கிரஸ் மூத்த தலைவர்! அடுத்த விக்கெட் காலியா? என்ன நடக்கிறது?
காங்கிரஸில் முக்கிய பொறுப்பில் இருந்த பல்வேறு தலைவர்கள், பாஜகவில் இணைவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு காங்கிரஸ் தலைமை முயன்ற போதிலும், எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
தமிழக காங்கிரஸை பொறுத்தவரையில், குஷ்பு, விஜயதாரணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், பாஜகவில் இணைந்திருந்தனர். சமீபத்தில் கூட, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஹரி வல்லப் சுக்லா தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான கமல் நாத், ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, மத்திய பிரதேச மாநிலம் பீடல் பகுதியில் பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட கமல் நாத், ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகத்தை கூறி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
முன்னதாக, கமல் நாத்தும் அவரது மகன் நகுல் நாத்தும், டெல்லிக்கு பிப்ரவரி மாதத்தின் போது சென்றிருந்தார்கள். இதனால், இவர்கள் இரண்டு பேரும், பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் கூறப்பட்டது. மேலும், கமல் நாத்தின் வீட்டில், ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகம் எழுதிய கொடியும், ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு தொடர்ச்சியாக சர்ச்சைகள் கிளம்பியதால், இவர் நிச்சயம் பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல் நாத், அந்த கொடியை நீக்கியதுடன், தான் பாஜகவில் இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தார்.
என்னதான், கமல் நாத் அன்று விளக்கம் கொடுத்திருந்தாலும், தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறியிருப்பது, பலரையும் பரபரப்பாக்கியுள்ளது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)