தமிழகம்
கிராம மக்கள் உற்சாகம்: 75 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பேருந்து சேவை!
75 ஆண்டுகளுக்குப் பிறகு கிராமத்திற்கு முதல் முறையாக பேருந்து சேவை வழங்கப்பட்டதால் கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு ஒன்றியம் ஆந்திர எல்லை கிராமமான சி. என். கண்டிகை மலை கிராமத்திற்கு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்தும் இதுவரை பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படாததால், கிராம மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் வெளியூர் சென்று வர அவதிப்பட்டு வந்தனர்.
கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கை ஏற்று திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு சி.என். கண்டிகை முதல் பொதட்டூர்பேட்டை மார்க்கத்தில் திருத்தணிக்கு அரசு பேருந்து சேவையை எஸ் சந்திரன் எம்எல்ஏ இன்று தொடங்கி வைத்து பள்ளி மாணவர்களுடன் பேருந்தில் பயணம் செய்தார்.
கிராம மக்களின் பல ஆண்டுகள் கனவை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு, சட்டமன்ற உறுப்பினருக்கு கிராம மக்கள் பெண்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.