Connect with us

Raj News Tamil

மெய் மறந்து கிட்டார் வாசித்த இளைஞர்.. திடீரென வந்த பாம்பு.. இறுதியில் நடந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்த நெட்டிசன்கள்!

உலகம்

மெய் மறந்து கிட்டார் வாசித்த இளைஞர்.. திடீரென வந்த பாம்பு.. இறுதியில் நடந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்த நெட்டிசன்கள்!

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஆபத்துடன் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆபத்தான விலங்குகளாக இருந்தாலும், அதனை கையாளும் விதம் அவர்களது தனித்துவமான விஷயமாக கருதப்படுகிறது.

இதனை உணர்த்தும் விதமாக, ஆஸ்திரேலியா இளைஞரின் வீடியோ ஒன்று, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. அதாவது, மில்லர் வில்சன் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர், ஆற்றின் குறுக்கே அமர்ந்துக் கொண்டு, அமைதியாக கிட்டார் வாசித்துக் கொண்டு இருந்தார். அப்போது, அந்த ஆற்றில் இருந்து கடுமையான விஷத் தன்மை கொண்ட பாம்பு ஒன்று வெளியே வந்தது.

இதனை பார்த்து எந்தவொரு அதிர்ச்சியும் கொள்ளாத அந்த இளைஞர், மீண்டும் நிதானமாக கிட்டார் வாசிக்கத் தொடங்கினார். பின்னர், அந்த பாம்பும், அங்கிருந்து நகர்ந்துவிட்டது.

இந்த வீடியோவுக்கு கேப்ஷன் வழங்கிய மில்லர் வில்சன், “இந்த நாட்டில் நான் 10 வருடங்களுக்கும் மேலாக, பாம்புகளை படம்பிடித்து வருகிறேன். ஆனால், இந்த வீடியோ, இந்த வகையான உயிரினங்களின் மென்மையான பக்கத்தை நமக்கு காட்டியுள்ளது” என்று கூறியுள்ளார்.

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பாம்பை பார்த்த பிறகும், இளைஞர் ஒருவர் அமைதியாக இருந்தது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பல்வேறு நெட்டிசன்கள், விதவிதமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வந்தனர். அதில் ஒரு நெட்டிசன், “உன்னுடைய செல்போன்-ல ஏதாவது வீடியோ கேம்ஸ் இருக்கா என்று கூறிவிட்டு, அந்த பாம்பு சென்றதை போன்று உள்ளது” என்று ஜோக் அடித்துள்ளார்.

இன்னொரு நெட்டிசன், “ பாம்புகளை பார்க்கும்போது அப்படியே இருங்கள்.. இது ஒரு சர்வதேச பாதுகாப்பு வழிமுறை” என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பலரும், பல்வேறு விதங்களில் தங்களது எண்ணங்களை கமெண்ட்ஸ் பக்கத்தில் தெரிவித்து, அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

More in உலகம்

To Top