இந்தியா
பக்தர்களுக்கு எச்சரிக்கை: ஸ்ரீசைலம் கோவில் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்!
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் புகழ்பெற்ற சைவ ஷேத்திரம் ஆன பிரம்மராம்பா சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே இந்த கோவில் அமைந்துள்ள நிலையில் சில நாட்களுக்கு முன் கோவில் சமீபத்தில் சத்திரங்கள் அமைந்துள்ள பகுதி அருகே இரவு நேரத்தில் சிறுத்தை புலி ஒன்று வந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் அதே பகுதியில் அமைந்துள்ள ரெட்டியார் சத்திரம் அருகே சிறுத்தை புலி ஒன்றின் நடமாட்டம் காணப்பட்டது.
சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை சத்திரத்தின் மேலிருந்து வீடியோ எடுத்த பக்தர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.
மேலும் சிறுத்தை புலி நடமாட்டம் பற்றி அவர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.
சிறுத்தை நடமாட்டம் தொடர்வதன் காரணமாக தேவஸ்தான அதிகாரிகளும் வனத்துறையினரும் ஸ்ரீசைலம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.