தமிழகம்
சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை? – உயர்நீதிமன்றம்!
சாந்தனை இலங்கைக்கு அனுப்ப 22-ம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன்? அனுப்பவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, சாந்தனை இலங்கை அனுப்பவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் துரதிருஷ்டவசமாக நேற்று உயிரிழந்துவிட்டதாக கூறினார்.
சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி எப்போது கிடைத்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், கடந்த 22ம் தேதி அவரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக கூறினார்.
சாந்தனை இலங்கைக்கு அனுப்ப 22ம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன்? அனுப்பவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ஜனவரி 24ம் தேதி முதலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரால் நகர கூட முடியவில்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து, இன்று பிற்பகலுக்குள் சாந்தனின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.