Connect with us

Raj News Tamil

மகளிர் உரிமைத் தொகை: சொன்னதை செய்வான் கருணாநிதியின் மகன் என்பதற்கு இதுதான் சாட்சி-மு.க.ஸ்டாலின்!

தமிழகம்

மகளிர் உரிமைத் தொகை: சொன்னதை செய்வான் கருணாநிதியின் மகன் என்பதற்கு இதுதான் சாட்சி-மு.க.ஸ்டாலின்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்; சொன்னதை செய்வான் கருணாநிதியின் மகன் என்பதற்கு இதுதான் சாட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

“இத்திட்டத்தை தொடங்கி வைப்பதை என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பேறாக கருதுகிறேன். தாய் தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா. இனி, இந்தப் பெயரை யாராலும் நீக்க முடியாது.

இந்த பெயர் நீட்டிக்கும் காலம் எல்லாம் நாட்டை அண்ணாதுரைதான் ஆள்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்கும் நான் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த மகளிர் உரிமைத் தொகையைப் பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளும் இந்த ஸ்டாலின்தான் ஆள்கிறான் என்று பொருள்.

இந்த இரண்டரை ஆண்டுகளில் எத்தனை பயனுள்ள திட்டங்கள், விடியல் பயணத் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், உயர்கல்வி கற்க வரும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், இந்த திட்டங்களை எல்லாம் தொடங்கியபோது எப்படிப்பட்ட மகிழ்ச்சையை அடைந்தேனோ, அதைவிட அதிகமான மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன்.

இந்த ஆயிரம் ரூபாய் உங்கள் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கப்போகிறது. நாள் தோறும் உதிக்கும் உதயசூரியன் உங்களுக்கு புத்துணர்ச்சியைப் போல, இந்த ஆயிரம் ரூபாய் உங்களுக்கு பயன்படப் போகிறது. இது திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த வாக்குறுதி. ரொம்ப முக்கியமான வாக்குறுதி. இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி, பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டனர். இவர்களால் தரமுடியாது என்று பொய் பரப்புரையை தங்களுடைய உயிர் மூச்சாக வைத்து வாழும் சிலர் கூறினார்கள்.

ஆட்சிக்கு வந்ததுமே கொடுத்திருப்போம். ஆனால், நிதி நிலைமை சரியாக இல்லை. அதனால்தான், நிதி நிலையை ஓரளவுக்கு சரிசெய்துவிட்டு, இப்போது கொடுக்கிறோம். இதையும் சிலரால் தாங்க முடியவில்லை. பொய்களையும், வதந்திகளையும் பரப்பி இந்த திட்டத்தை முடக்க நினைத்தார்கள். அறிவித்துவிட்டால், எதையும் நான் நிறைவேற்றிக் காட்டுவேன் என்று தமிழக மக்களாகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

சொன்னதை செய்வான் கருணாநிதியின் மகன் என்பதற்கு இதுதான் சாட்சி. இந்த விழா காஞ்சிபுரம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில், நகரங்களில் நடந்துகொண்டு வருகிறது. என்னைப் போலவே, அமைச்சர்களுகும் பல்வேறு மாவட்டங்களில் சென்று விழாவில் கலந்துகொண்டுள்ளனர். நான் போட்ட ஒரு கையெழுத்து பலரது வாழ்க்கையையே மாற்றப் போகிறது என்ற உரிமையை எனக்கு கொடுத்தவர்களே மக்கள்தான்.

தமிழக மக்களாகிய நீங்கள், உதய சூரியன் சின்னத்தையும், எங்களது கூட்டணி கட்சியினரையும் ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வாக்களித்ததால்தான், முதல்வர் பொறுப்பில் அமர்ந்து, உங்களுக்குத் தேவையானதை செய்து கொண்டிருக்கிறேன். மக்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். மக்களுக்காகத்தான் பயன்படுத்துவேன்.

நான் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்த திட்டம், இரண்டு நோக்கங்களைக் கொண்ட திட்டம். ஒன்று, பலனை எதிர்பாராமல், வாழ்நாள் உழைக்கக்கூடிய பெண்களின் உழைப்புக்கு கொடுக்கக்கூடிய அங்கீகாரம். இந்தாண்டுக்கு 12000 ரூபாய், உரிமைத் தொகை கிடைக்கப்போகிறது. இது பெண்களுடைய வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்த, சுயமரியாதையுடன் சமூகத்தில் பெண்கள் வாழ உதவியாக இருக்கும். இவை இரண்டும் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கங்கள்” என்று முதல்வர் பேசினார்.

More in தமிழகம்

To Top