இந்தியா
லாரிக்கு டயர் மாற்றிய தொழிலாளிகள்: அரசு பேருந்து மோதி நான்கு பேர் பலி!
தேசிய நெடுஞ்சாலையில் லாரிக்கு டயர் மாற்றிக் கொண்டிருந்த நான்கு பேர் அரசு பேருந்து மோதி பரிதாபமாக மரணமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிரதிப்பாடு மண்டலத்தில் உள்ள பாதாலம்மா கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி பஞ்சர் ஆனதால், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்ட லாரிக்கு நான்கு பேர் டயரை மாற்றி கொண்டிருந்தனர்.
அப்போது அதிவேகமாக வந்த ஆந்திர அரசு போக்குவரத்து கழக சொகுசு பேருந்து அவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் டயர் மாற்றிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த தாசரி பிரசாத், தாசரி கிஷோர், கிளீனர் நாகய்யா மற்றும் ராஜூ ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பாபட்லா மாவட்டத்தில் உள்ள நக்கா பொக்கலபாலம் பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.