தமிழகம்
சாலையில் மது அருந்தும் இளைஞர்கள்.. கண்டும் காணாமல் சென்ற போலீஸ்..
தாம்பரம் அருகே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் நடத்தப்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தில், மதுவிலக்கு ஆயதீர்வைத்துறையின் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்தந்த டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கையில், அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் அருகே உள்ள பாரத் நகர் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை ஒன்றும், அரசு அறிவிப்பின்படி இழுத்து மூடப்பட்டுள்ளது.
இதனால், இந்திரா நகரில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுப்பிரியர்களின் கூட்டம், அலைமோதுகிறது. மேலும், அந்த டாஸ்மாக் கடையில், பார் வசதி இல்லாததால், மதுப்பிரியர்கள், சாலையிலேயே மது அருந்தி அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் இவ்வாறு அராஜகத்தில் ஈடுபடுவதை, அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளும், கண்டும் காணாமல் செல்கின்றனர். எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment Login