தமிழகம்
106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி!
இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டும் வழக்கம் போல பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
16-வது லீக் ஆட்டம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், மோதின.
இதில் கொல்கத்தா அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரேன் களமிறங்கினர். இதில் பிலிப் சால்ட் 18 ரன்களில் அவுட்டானதை தொடர்ந்து அடுத்து வந்த ரகுவன்ஷியுடன் சுனில் நரேன் ஜோடி சேர்ந்தார்.
இவர்கள் இருவரும் அரைசதத்தை கடந்து அசத்திய நிலையில், ரகுவன்ஷி 54 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிரடியாக விளையாடிய சுனில் நரேன் 39 பந்துகளில் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சிக்ஸர்களை பறக்கவிட்ட ஆண்ட்ரே ரசல் 41 ரன்களில் போல்ட் ஆனார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களிலும், ரிங்கு சிங் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த 2-வது அணி என்ற வரலாற்று சாதனையை கொல்கத்தா படைத்துள்ளது. தொடர்ந்து 273 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி அணி பேட்டிங்கை தொடங்கியது.
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர். இதில் பிரித்வி ஷா 10 ரன்களிலும், டேவிட் வார்னர் 18 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் மற்றும் அபிஷேக் போரல் ஆகிய இருவரும் ரன் ஏதுமின்றி அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். அரைசதம் கடந்த கேப்டன் ரிஷப் பண்ட், 55 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக டெல்லி அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.