தமிழகம்
இன்று நடைபெறும் சனிப்பெயர்ச்சி! – திருநள்ளாறில் கோலாகலம்!
சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரன் கோயிலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் சனிப்பெயா்ச்சியானது இன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்க உள்ளார்.
இந்த சனிப்பெயர்ச்சியானது காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெறும்.
சனிப்பெயர்ச்சி நிகழ்வின் போது சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள், அஷ்டோத்திர அர்ச்சனை, சகஸ்கர நாம அர்ச்சனை, தீப வழிபாடு உள்ளிட்டவை நடைபெறும். சரியாக மாலை 5.20 மணிக்கு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சனி கிரகம் பிரவேசிப்பதை குறிக்கும் வகையில் மங்கள வாத்தியங்களோடு ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்படும்.
தங்க காக வாகனத்தில் அருள்பாலிக்கும் உற்சவரை பொதுமக்கள் சிரமமின்றி வழிபாடு செய்யவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கோயிலை சுற்றி 1400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோயில் வளாகம் மட்டுமல்லாமல் நகரின் முக்கிய பகுதிகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இன்று நாள் முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.