தமிழகம்
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 10 ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை இன்று முதல் ஏப்ரல் 8 ந் தேதி வரையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 12,616 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள், மூன்றாம் பாலினித்தவர் ஒருவர் என 9 லட்சத்து10 ஆயிரத்து 24 பேர் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தனித்தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 மாணவர்கள் எழுத உள்ளனர். 4107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் பொதுத்தேர்வினை நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகளை செய்துள்ளது.
பறக்கும் படை உறுப்பினர்கள் 3350 பேரும், நிலையான பறக்கும் படை 1214 பேரும், தேர்வினை கண்காணிக்கும் பணியில் 48 ஆயிரத்து 700 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 810 பள்ளிகளில் படிக்கும் 66 ஆயிரத்து 771 மாணவர்கள் 288 மையங்களில் தேர்வினை எழுதுகின்றனர்.
வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சிராப்பள்ளி, புழல் சிறையில் உள்ளவர்களும் தேர்வு எழுதுவதற்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் செல்போன் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.