தமிழகம்
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது!
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ஜோதிமணி, கட்டிட வரைபட அனுமதிக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் வாசுதேவன் (47) என்பவர் கட்டிட வரைபட அனுமதிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அவரிடம் கட்டிட வரைபட அனுமதிக்கு ஒப்புதல் வழங்க நகரமைப்பு ஆய்வாளர் ஜோதிமணி(56), ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து வாசுதேவன் விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் வாசுதேவன், இன்று (ஏப்ரல் 26) காலை ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை ஜோதிமணியிடம் கொடுத்தார். விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், சால்வன்துரை தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து ஜோதிமணியை கைது செய்தனர்.