தமிழகம்
சிறுமியை கடித்து குதறிய நாய்கள்: உரிமையாளர் கைது!
ஆயிரம் விளக்கு பகுதியில் பூங்கா அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக ரகு என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக் ஷாவும் பூங்கா உள்ள ஒரு சிறு அறையில் ஒன்றாக வசித்து வருகிறார்கள். நேற்று காவலாளி ரகு உறவினர் ஒருவர் இறந்ததாக கூறி விழுப்புரம் சென்றுள்ளார். பூங்காவில் சோனியாவும் 5 வயது மகள் சுதக் ஷாவும் மட்டும் இருந்துள்ளனர்.
இதனிடையே நேற்று மாலை பூங்கா அருகே வசிக்ககூடிய புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் இரண்டு நாய் உடன் பூங்கா சென்றுள்ளார். அப்போது பூங்கா உள்ளே விளையாடி கொண்டு இருந்த காவலாளி மகள் சுதக் ஷாவை இரண்டு நாய்களும் கடுமையாக கடித்தது.
இதை பார்த்த நாயின் உரிமையாளர் எதும் செய்யாமல் இருந்துள்ளார். குழந்தையின் அழுக்குரல் கேட்டு வந்த தாய் சோனியா வெறி பிடித்த இரண்டு நாய்களிடம் இருந்து தனது குழந்தையை காப்பாற்றி உள்ளார். அப்போது அவரது தாய் சோனியாவையும் இரண்டு நாய்களும் கடித்துள்ளது.
இதை பார்த்த நாயின் உரிமையாளர் நாயை அங்கே விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார். இரண்டு வெறி நாய் கடித்ததில் தலையில் பயங்கர காயத்துடன் இரத்த வெள்ளத்தில் அந்த குழந்தையை அருகில் இருந்தவர்கள் மீட்டு இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆயிரம் விளக்கு போலீசார் புகழேந்தியை விசாரணைக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் நாயின் உரிமையாளர் குழந்தைக்கு தனது செலவில் சிகிச்சை மேற்கொள்வதாக கூறி உள்ளார்.
உடனே இராஜீவ காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆயிரம் விளக்கு அப்போலோ குழந்தைகள் மருத்துமனைக்கு குழந்தை மாற்றப்பட்டு அங்கு குழந்தைக்கு தற்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.