தமிழகம்
பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: வேன் கிளீனர் போக்சோவில் கைது!
செம்பரம்பாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளி வாகனத்திலேயே செல்வது வழக்கம். மாணவிகளை அழைத்துச் செல்லும் வாகனத்தில் நசரத்பேட்டையை சேர்ந்த ஞானசேகர்(32) என்பவர் கிளீனராக வேலை செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக பள்ளி வாகனத்தில் வரும் மாணவிகளிடம் ஞானசேகர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஞானசேகரை பிடித்து விசாரித்தனர் .
போலீசாரின் விசாரணையில் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த மாணவிகளிடம் ஞானசேகர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஞானசேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர் . கைது செய்யப்பட்ட ஞானசேகரை, பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
தனியார் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கிளீனர் கைது செய்யப்பட்ட சம்பவம் மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.