தமிழகம்
வரலாறு காணாத உச்சம்: ரூ.54,000 கடந்த தங்கம் விலை!
சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை மேலும் மேலும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது.
அதன்படி இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,805-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.90-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெகு விரைவில் பவுன் தங்கம் ரூ.60 ஆயிரத்தை எட்டும் வாய்ப்பும் இருப்பதாக தங்க வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் (சாந்தகுமார்) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி நீடித்து வருகிறது. இதேபோல் தங்கத்தின் மீதான முதலீடு காரணமாக தேவை அதிகரித்து வருகிறது. உள்ளூர் சந்தையிலும், வெளி சந்தையிலும் மக்கள் போட்டி போட்டு கொண்டு தங்கத்தை வாங்கி வருகின்றனர்.
இதன் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. ஒருசில நாட்களுக்கு இதே விலை உயர்வு காணப்படும். வெகு விரைவில் பவுன் தங்கம் ரூ.60 ஆயிரத்தை எட்டும் வாய்ப்பும் இருக்கிறது என்றார்.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நடுத்தர மக்களிடையே இனி தங்கம் வாங்க முடியுமா என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
பொதுமக்கள் பேட்டி:
தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் இப்படியே அதிகரித்துக் கொண்டு இருந்தால் வருங்கால சங்கதிகளுக்கு தங்கம் வாங்குவது என்ற எண்ணமே போய்விடும் என்றும் தங்கத்தின் விலை இப்படி அதிகரித்துக் கொண்டே இருந்தால் நடுத்தர மக்களாகிய எங்களுக்கு மிகச் சிரமமாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.