தமிழகம்
494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் தற்கொலை!
12-ம் வகுப்பில் 494 மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவன், மதிப்பெண் குறைந்து விட்டது என்ற வருத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள கிளப் ரோடு மணி நகரத்தில் குடியிருக்கும் கண்ணன் மகன் ஜெயவர்மன் (வயது 17) இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
தற்பொழுது நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மாணவன் குறைவாக மதிப்பெண் எடுத்ததாகவும் அதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பொழுது தனது வீட்டின் மூன்றாவது மாடியில் தூக்கிட்டு மாணவன் தற்கொலை செய்துள்ளார்.
வெகு நேரமாக வீட்டில் ஆள் இல்லாததால் உறவினர்கள் மாணவனை தேடிப் பார்த்த பொழுது மாடியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்பு கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய மாணவனை பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் மாணவன் மதிப்பெண்கள் வெளியிட்ட கடந்த இரண்டு நாட்களாக நான் நினைத்தது போல் மதிப்பெண் எனக்கு கிடைக்கவில்லை என மன உளைச்சலில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தான் 500-க்கு மேல் மதிப்பெண் வாங்குவேன் என நினைத்திருந்ததாகவும், தன்னால் 500க்கு மேல் வாங்க முடியவில்லை என மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.