தமிழகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி!
திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரா. கணவரை இழந்த இவர் தனது மகன் சுரேஷ்குமார் மற்றும் மருமகள் ரூபினி ஆகியோருடன் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மூதாட்டியின் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், தனது பெயரில் உள்ள ரூ.15 லட்சம் மதிப்புள்ள 8 சென்ட் நிலத்தை அபகரிப்பதற்காக பத்திரத்தில் கையெழுத்து போட வற்புறுத்தி மகன் சுரேஷ்குமார் மற்றும் மருமகள் ரூபினி கடந்த 6 மாத காலமாக கொடுமைபடுத்தி வருவதாக மூதாட்டி புகார் தெரிவித்தார்.
இது குறித்து ஏற்கனவே காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து தன்னை துன்புறுத்தி வருவதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.