தமிழகம்
எதே….காருக்குள் ஹெல்மெட் அணியாததற்கு 1000 ரூபாய் அபராதமா??
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சேர்ந்தமரம் வேலப்பநாடாரூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் சுரேஷ் கண்ணன். இவருக்கு சொந்தமான சொகுசு காருக்கு சில நாட்களுக்கு முன்பு தலைக்கவசம் அணியவில்லை என, ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டதாக அவருடைய செல்போன் எண்ணிற்கு குறுஞ் செய்தி வந்துள்ளது.
அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் என்னுடைய கார் சங்கரன்கோவில் பகுதிக்கு வரவே இல்லை, ஆனால் சங்கரன்கோவில் தாலூக காவல்துறையினர் எனக்கு அபராதம் விதித்தது வேதனையாக உள்ளதாக தெரிவித்தார்.
காவலர்களுக்கு நாள் ஒன்றுக்கு இத்தனை வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என காவல்துறையினரை நிர்பந்தம் செய்வதானலும் இது போன்ற தவறுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சங்கரன்கோவில் பகுதியில் சாலையில் செல்லாத வாகனங்களுக்கு காவல்துறையினர் தொடர்ந்து அபராதம் விதித்து வரும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.