தமிழகம்
IPL: 2-வது ஆட்டத்திலும் வெற்றிவாகை சூடியது CSK!
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை சூப்பர் அணி அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ருதுராஜ் கெய்க்வாட் 36 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார், அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.
பின்னர் வந்த சிவம் துபே-வும் (Shivam Dube) குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்களை சிதறடித்தார், இறுதியில் 23 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார்.
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 206 ரன்கள் குவித்தது.
கடினமான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. கேப்டன் சுப்மன் கில் 8 ரன்களில் விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினார்.
மற்றொரு தொடக்க வீரரான விருத்திமான் சாஹா-வும் 21 ரன்கள் குவித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 37 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த வீரர்கள் யாரும் அதிரடியாக காட்ட தவறியதால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் குவித்து தோல்வியை தழுவியது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.