இந்தியா
நிஜார் கொலை வழக்கு.. கைது செய்யப்பட்ட 3 இந்தியர்கள்.. கனடா அதிகாரிகளுக்கு அறிக்கை வெளியிட்ட இந்திய தூதர்!
கனடா நாட்டை சேர்ந்தவரும், காலிஸ்தானின் தீவிர ஆதரவாளருமான ஹர்தீப் சிங் நிஜார், பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, இந்த சம்பவத்திற்கு பிறகு, இந்தியா – கனடா இடையிலான உறவு என்பது, பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, கனடாவில் வசித்து வரும் 3 இந்தியர்களை, அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து, கனடா நாட்டிற்கான இந்திய தூதர் சஞ்சய் வெர்மா, கைது நடவடிக்கை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கனடாவின் குடிமகன் ஹர்தீப் சிங் நிஜார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, கனடாவில் வசித்து வரும் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக, எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கனடா அதிகாரிகளிடம் இருந்து, இந்த வழக்கு தொடர்பான தகவல்கள், தொடர்ச்சியாக கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
மேலும், “ஏற்கனவே பலமுறை தொடர்ச்சியாக கூறியதன்படி, மற்ற நாடுகளின் உள்நாட்டு பிரச்சனையில் இந்திய அரசாங்கம் தலையிடாது என்பது எங்களது கொள்கை.
கூட்டணி நாடுகளின் குற்றங்களை சரி செய்வதற்கும், எங்களிடம் உள்ள குறிப்பிடத்தக்க, சரியான ஆதாரங்களை கொடுப்பதற்கும், நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம்” என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி, “இது கனடா நாட்டின் உள்நாடு சம்பந்தப்பட்ட பிரச்சனை. இது தொடர்பாக மத்திய அரசு கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை” என்றும் தன்னுடைய அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.