தமிழகம்
கிரிக்கெட் மேட்ச் பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்..அலறிய பயணிகள்
கடந்த 24ம் தேதி இரவு தனியார் பேருந்து ஒன்று கடலூர் மாவட்டத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
இந்நிலையில், பேருந்தை இயக்கிய ஓட்டுனர் தனது செல்போனில் மும்பை- குஜராத் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே அலட்சியமாக பேருந்தை ஓட்டிச் சென்றார். இதனால் ஏற்பட்ட கவனக் குறைவால், பேருந்துக்கு முன்னால் சென்ற கார் மற்றும் அரசு பஸ் மீது மோதுவதுபோல் சென்றுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டை பார்த்துக் கொண்டே பேருந்தை இயக்கிய சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுனரை அழைத்து சிதம்பரம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்து, ஒரு மாத காலத்திற்கு ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர்.