இந்தியா
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை: கர்நாடக துணை முதல்வர்!
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெங்களூருவுக்கு தேவையான குடிநீரை வழங்குவதில் கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது. காவிரி நீரைக் கொண்டு பெங்களூருவின் தாகம் தணிக்கப்படும். முன்பை விடஅதிகளவிலான நீர் பெங்களூருவுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. நீரின் அளவை பொறுத்து விவசாய தேவைகளுக்கும் வழங்கப்படும்.
பெங்களூருவில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கு நீரை திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட மாட்டோம். இப்போது கோடை காலமாக இருப்பதால், காவிரி ஆறு முற்றிலுமாக வறண்டு போய் உள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட்டால், தமிழகத்தை சென்றடைய 4 நாட்கள் ஆகும். எனவே காவிரி நீரை திறந்துவிட்டுள்ளதாக அரசியல் உள்நோக்கத்துடன் பொய்யான தகவல்களை மக்களிடம் கொண்டு செல்லக்கூடாது என்றார். இவ்வாறு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.