தமிழகம்
திமுக தொகுதி பங்கீடு: விசிக-க்கு 2 தொகுதி; மதிமுக-க்கு 1 தொகுதி!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையிலான பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து திமுக, மதிமுக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மூன்று கட்டமாக நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மதிமுகவிற்கு ஒரு மக்களவைத் தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி உடன்பாடு இறுதிசெய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. எந்த தொகுதி என்பது குறித்து மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேசியபின் தெரியவிக்கப்படும். மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம். மாநிலங்களவை தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருப்பதால் தற்போது அதுகுறித்து பேசவில்லை என வைகோ தெரிவித்தார்.