இந்தியா
“திருமணம் இப்பவே பண்ணிக்கோங்க.. இனிமேல் முடியாது” – முதலமைச்சர் பதிலடி!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்க இருப்பதால், முன்னணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு கட்சியினர் மற்ற கட்சியினரை விமர்சனம் செய்வதையே, தங்களது பிரச்சார யுக்தியாக பின்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த் பிஸ்வா சர்மா, அனைத்திந்திய யுனைடட் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் பத்ருதீன் அஜ்மலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது, பத்ருதீன் அஜ்மல், சமீபத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “பாரதிய ஜனதா கட்சி முஸ்லீம்களை தூண்டிவிட முயற்சி செய்கிறது. ஒருவர் பலமுறை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அந்த மதம் அதனை அனுமதிக்கும்போது, யாராலும் தடுக்க முடியாது” என்று கூறியிருந்தார்.
இதற்கு தான், அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமாந்த் பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ திருமணம் செய்துக் கொள்வதாக இருந்தால், இப்போதே திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.
ஆனால், தேர்தலுக்கு பிறகு, நீங்கள் பல திருமணங்கள் செய்துக் கொள்ள நினைத்தால், ஜெயிலுக்கு செல்ல நேரிடும். ஏனென்றால், தேர்தலுக்கு பிறகு, அஸ்ஸாம் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வர உள்ளது” என்று கூறியிருந்தார்.
பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
இந்தியாவில், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம், புத்தம், சமணம், சீக்கியம் என்று பல்வேறு மதங்கள் உள்ளது. இந்த ஒவ்வொரு மதமும், தங்களுக்கென்று சில விதிகளை வைத்துள்ளது.
அதாவது, திருமணம், விவாகரத்து, குழந்தையை தத்தெடுத்தல், ஜீவனாம்சம் வழங்குதல் என்று ஒவ்வொரு விஷயங்களுக்கும், ஒவ்வொரு மதங்களுக்கும், ஒவ்வொரு விதி உள்ளது.
ஆனால், இவ்வாறு ஒவ்வொரு மதத்திற்கும், ஒவ்வொரு விதி இருப்பதால், நாட்டை நிர்வாகம் செய்ய கடினமாக உள்ளது என்று கூறியுள்ள மத்திய அரசு, நாடு முழுவதும், அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டத்தை உருவாக்க முணைந்துள்ளது. இதுதான், பொது சிவில் சட்டம் என்று கூறப்படுகிறது.
இந்த பொது சிவில் சட்டம், இதுவரை, குஜராத், உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மட்டும் அமலாகியுள்ளது. கூடிய விரைவில், அஸ்ஸாம் மாநிலத்திலும், இச்சட்டம் கொண்டுவரப்பட்ட உள்ளது.
ஆனால், இந்த சட்டம் அமலுக்கு வந்தால், சிறுபான்மையினரின் பாதுகாப்பு பாதிப்புக்கு உள்ளாகும் என்று எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.