தமிழகம்
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!
தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
இதில் 3,58,201 மாணவர்கள் மற்றும் 4,13,998 மாணவிகள், ஒரு திருநங்கை என மொத்தம் 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பேர் பொதுத் தேர்வினை எழுதவுள்ளனர். இதற்காக 3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் விதிமீறல்களில் ஈடுபடாமல் தடுக்க 3200 பறக்கும் படையினர் மற்றும் 1135 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள், உள்ளனர். 43,200 தேர்வு அறை மைய கண்காணிப்பாளர்கள் பணியாற்ற உள்ளனர்.
சென்னையில் மட்டும் மொத்தம் 240 சென்டர்களில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.
மாணவர்கள் சரியான நேரத்திற்குப் பள்ளிக்கு வருவதற்காகப் போக்குவரத்துத் துறையின் மூலம் ஏற்படும் செய்யப்பட்டுள்ளது. தடையில்லா மின்சார விநியோகத்திற்காக மின்சார வாரியம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, காற்றோட்டமான அறைகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.