இந்தியா
மணிப்பூர் சேர்ந்த 2 பெண்களை மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும்!
மணிப்பூர் மாநிலத்தின் இரு சமுதாய பிரிவை சேர்ந்த 2 பெண்களை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளோம்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 31 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று சந்தித்து, ஒரு மனு கொடுத்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் கார்கே கூறியதாவது:
மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. இதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 5 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால், கலவரத்தை கட்டுப்படுத்த மணிப்பூர் அரசும் மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு பிரதமர் மோடியை வலியுறுத்த வேண்டும் என முர்முவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த பிரதமர் அங்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். மணிப்பூர் மாநிலத்தின் இரு சமுதாய பிரிவை சேர்ந்த 2 பெண்களை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி உள்ளோம்.
பிரதமர் அலுவலகத்தில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள ஹரியாணா மாநிலம் நூ பகுதியில்மத ரீதியிலான மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுபற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. எனவே, ஹரியாணாவில் கலவரம் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.