தமிழகம்
யாசகம் பெற்று சேர்த்து வைத்த ரூ.56 லட்சம் பணம்.. மக்களுக்கே திரும்பி கொடுத்த முதியவர்..
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர், திருச்சியில் உள்ள பல்வேறு வீதிகளில், யாசகம் பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவ்வாறு யாசகமாக பெறும் பணத்தை வைத்து, மக்களுக்கும் சில உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த பூல்பாண்டியன், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, ரூபாய் 10 ஆயிரத்தை வழங்கினார்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, இதுவரை ரூபாய் 56 லட்சத்தை கொடுத்துள்ள இவர், அரசு பள்ளிகளுக்கும், பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார். பணத்தை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த பூல்பாண்டியன், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட யாசகத்தை பொதுமக்களின் நலனுக்காக அளிப்பதில், மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
மேலும் எங்கு சென்றாலும் பலருக்கு உதவி செய்வேன் என்ற நம்பிக்கையுடன் தன்னிடம் யாசகம் கொடுப்பதாகவும் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் ஆயிரக்கணக்கில் எனக்கு பணம் கொடுத்து உதவுகிறார்கள் என்றும் பூல்பாண்டியன் கூறினார்.
You must be logged in to post a comment Login