தமிழகம்
தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தனியார் தொலைக்காட்சிக்கு வந்த மிரட்டல் விடுக்கப்பட்டதால் தலைமைச் செயலகம் முழுவதும் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல்வரின் பிறந்த நாளை ஒட்டி பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் வெடிகுண்டு வெடிக்கும் என காலை ஏழு முப்பது மணி அளவில் தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதனை அடுத்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களை கொண்டு தலைமைச் செயலகம் முழுவதும் அமைச்சர்கள் அறை பேரவை நடைபெறும் இடங்கள் முக்கிய அறைகள் என அனைத்து இடங்களிலும் அதிரடியாக சோதனைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிகுண்டு உள்ளதா என்பது குறித்து கருவிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் அனைத்து இடங்களிலும் இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனைகள் நடைபெற்று வருகிறது. மிரட்டல் உண்மையாய் அல்லது புரளியா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சிக்கு விடுக்கப்பட்ட மிரட்டலையடுத்து தலைமைச் செயலகம் மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.