இந்தியா
தேர்தல் பத்திரங்கள்: பாஜகவுக்கு ரூ.6,060 கோடி, காங்கிரஸுக்கு ரூ.1,421.86 கோடி, திமுகவுக்கு ரூ.639 கோடி!
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, இதில், அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1,609.53 கோடி கிடைத்துள்ளது. இது ஒட்டுமொத்த மாநிலக் கட்சிகள் பெற்ற நன்கொடையில் 30 சதவீதமாகும். பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சிக்கு ரூ.1,214.70 கோடி, பிஜு ஜனதா தளத்துக்கு ரூ. 775.50 கோடி, தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு ரூ.639 கோடி, ஆந்திரத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 337 கோடி, தெலுங்கு தேசம் கட்சிக்கு 218.88 கோடி, சிவசேனை கட்சிக்கு ரூ. 159.38 கோடி கிடைத்துள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ரூ.73.5 கோடி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ரூ.43.40 கோடி, சிக்கிமி கிரந்திகரி கட்சிக்கு ரூ.36.5 கோடி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ.31 கோடி, ஜனசேனை கட்சிக்கு ரூ.21 கோடி, சமாஜவாதி கட்சிக்கு ரூ. 14.05 கோடி, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ரூ. 14 கோடி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ரூ. 13.5 கோடி கிடைத்துள்ளது. அகாலி தளம் கட்சிக்கு ரூ. 7.2 கோடி, அதிமுகவுக்கு ரூ. 6.05 கோடி, சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சிக்கு ரூ. 5.5 கோடி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, ஜம்மு-காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி, கோவா முற்போக்கு கட்சி ஆகியவற்றுக்கு தலா ரூ. 1 கோடி கிடைத்துள்ளது.
தேசியக் கட்சிகள்:
தேசியக் கட்சிகளைப் பொருத்தவரை 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் ரூ. 6,060.51 கோடி நன்கொடையுடன் பாஜக முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸுக்கு ரூ.1,421.86 கோடி கிடைத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.65.45 கோடி கிடைத்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி ஆகியவை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறவில்லை.