ஆரோக்கியம்
நிபா வைரஸ் எப்படி பரவுகிறது? அதன் அறிகுறிகள் என்ன?
நிபா வைரஸ் நேரடியாக வெளவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும். அவை கடித்த பழங்களை உண்பதால் ஏற்படலாம். அல்லது அவற்றின் சிறுநீர், உமிழ்நீர் என எந்த வகையிலும் நோய்த்தொற்று ஏற்படலாம்.
வௌவால்கள் மூலம் குதிரை, நாய், எலி, பூனை என வீட்டில் வளர்க்கும் விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும்.
காய்ச்சல் ஏற்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து, அவருக்கு அருகில் நெருக்கமாக இருப்பவர்களுக்கும் நோயாளியின் உடல் திரவங்கள் (உமிழ் நீர், ரத்தம், சிறுநீர்) மூலம் மற்றவர்களுக்கு இந்நோய் பரவலாம்.
நோய் அறிகுறிகள் என்னென்ன?
நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிற வைரஸ் காய்ச்சலைப் போலவே காய்ச்சல், தலைவலி, உடல் வலி, அசதி, இருமல், வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படலாம். சிலருக்கு வலிப்பும் ஏற்படலாம். பார்வைக் கோளாறும் ஏற்படலாம். இறுதியில், மயக்க நிலையை அடைந்து மரணம் ஏற்படும்.
தடுப்பூசிகள் இல்லை
இந்த நிபா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுத்துக்கொள்ளலாமா என்றால், அதற்கான தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, வரும்முன் காப்பதுதான் சிறந்தது என்று மக்கள்தான் தொற்று ஏற்படாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
நோய் பரவாமல் தடுப்பது எப்படி?
முதலில், நோய் பாதிப்பு உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வீட்டு விலங்குகள் மற்றும் பண்ணையில் வளர்க்கப்படும் விலங்குகளிடம் மாற்றம் தெரிந்தால், உடனடியாக விலங்கு நல மருத்துவரிடம் காண்பித்து நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும்.
எந்தக் காய்ச்சல் என்றாலும் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டும். காய்ச்சல் கண்டவரை, அரசு மருத்துவமனையில் வைத்து அதற்கான வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
வீடு அருகே எலியோ பூனையோ எந்த விலங்கோ இறந்தாலும், உடனடியான வனத் துறையினருக்கும், சுகாதாரத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.