இந்தியா
சாலையில் தனியாக கிடந்த சூட்கேஸ்…திறந்து பார்த்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி
நேற்று மதியம் 12.30 மணியளவில் மும்பை குர்லாவில் உள்ள சாந்தி நகரின் சிஎஸ்டி சாலையில் சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த சூட்கேஸை திறந்து பார்த்த போது அதில் பெண் ஒருவரின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சடலத்தை மீட்ட போலீசார் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. அவரது வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்கலாம் என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.