தமிழகம்
“சரக்கு அடிக்க காசு இல்ல.. காசு கொடு..” – வழிமறித்த கும்பல்! புது மாப்பிள்ளை படுகொலை!
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள மூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். சமீபத்தில் திருமணமான இவர், தற்போது வசித்து வரும் வீட்டில் வசதி குறைவாக இருந்ததால், வேறொரு வீட்டிற்கு குடியேற முடிவு செய்தார்.
அதன்படி, கடந்த வெள்ளிக் கிழமை அன்று, பழைய வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு, புதிய வீட்டிற்கு, தனது தம்பியுடன், வந்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர்களை வழிமறித்த கும்பல் ஒன்று, மது அருந்து பணம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு மணிகண்டன் மறுப்பு தெரிவித்ததால், இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறில், மணிகண்டனையும், அவரது தம்பியையும், அந்த கும்பல் கற்களை எடுத்துக் கொண்டு தாக்கியுள்ளது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரது தம்பியை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தப்பி ஓடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login