தமிழகம்
மது போதையில் தாக்க வந்த கணவன்…கடப்பாறையால் அடித்து கொன்ற மனைவி
திண்டுக்கல் மாவட்டம், நத்தம், கோவில்பட்டி ராஜாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). இவருக்கு திருமணமாகி பாண்டீஸ்வரி (33) என்ற மனைவியும், 4 பெண் குழந்தைகளும் உள்ளனர். ராஜேந்திரன் வெளி மாநிலங்களுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை ஓட்டி வந்துள்ளார்.
மது பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் 24 மணி நேரமும் மது போதையில் இருந்ததாகவும் இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இன்று ராஜேந்திரன் தனது மனைவியை கடப்பாரையைக் கொண்டு தாக்க முயன்ற போது தன்னை தற்காத்துக் கொள்ள மனைவி பாண்டீஸ்வரி கடப்பாரையை பிடுங்கி கணவரை தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த பாண்டீஸ்வரி நத்தம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
ராஜேந்திரனின் உடலை மீட்ட நத்தம் போலீசார் பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.