அரசியல்
அ.தி.மு.க. பிரமுகர் மயங்கி விழுந்து பலி.. ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் நடந்த சோகம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் ஈரோட்டில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கந்தன் (வயது 51). இவர் பண்ருட்டி அருகே உள்ள அண்ணா கிராமம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருந்தார். தேர்தல் பணிக்காக ஈரோட்டுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த இவர் தினமும் பிரசாரத்திற்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஈரோடு பிபி அக்ரகாரம் அரசு நடுநிலை பள்ளிக்கூடம் அருகில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட போது காலை 10 மணி அளவில் அவர் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்துள்ளார். பிறகு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் கந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேர்தல் பிரசாரத்தின் போது அ.தி.மு.க. பிரமுகர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் கட்சி நிர்வாகிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
You must be logged in to post a comment Login