தமிழகம்
தொண்டர் மீது கல் எறிந்த அமைச்சர்.. சமூக வலைதளங்களில் கிளம்பும் கடும் எதிர்ப்பு..
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகள், திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை சாலையில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஏற்பாடுகளை பால்வளத்துறை அமைச்சர் ச.மு.நாசர் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு வந்திருந்த நிர்வாகிகளுக்கும், தனக்கும் நாற்காலிகளை எடுத்து வருமாறு, தொண்டர்களிடம் நாசர் கூறியுள்ளார். ஆனால், நாற்காலிகளை எடுத்து வருவதற்கு தாமதம் ஆனதால், கடும் கோபம் அடைந்த அவர், அங்கிருந்த கற்களை எடுத்து, தொண்டர் மீது வீசி எறிந்தார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், இந்திய வரலாற்றில் ஒரு அரசின் அமைச்சர் மக்கள் மீது கல்லெறிவதை யாராவது பார்த்திருக்கிறார்களா. இதைத்தான் திமுக அரசின் அமைச்சர் சா.மு.நாசர் செய்திருக்கிறார். விரக்தியில் மக்கள் மீது கற்களை வீசுகின்றார். கண்ணியம் இன்றி, நல்லொழுக்கமின்றி மக்களை அடிமைகள் போல் நடத்துவது தான் திமுக’ என்று தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login