Connect with us

Raj News Tamil

இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பாஜக முயற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அரசியல்

இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பாஜக முயற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பாஜக முயற்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவுக்காக பேசுகிறேன் என்ற தலைப்பில் ஆடியோ ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:

இந்தியாவிற்காக எல்லோரும் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். காலம் காலமாக, இந்திய மக்கள் அனைவரும் போற்றிப் பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து, இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பையே சிதைக்க பாரதீய ஜனதா கட்சி முயற்சி செய்கிறது.

2014-ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாரதீய ஜனதா கட்சி – தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த மக்கள் நல வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தருவோம், ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம், சொந்த வீடு இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும்.

பத்து ஆண்டு ஆகப் போகிறது. ஆனால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ‘குஜராத் மாடல்’ என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி மாடல் – இப்போது என்ன ‘மாடல்’ என்றே தெரியாமல் முடியப் போகிறது!

திராவிட மாடல் என்னென்ன சாதனைகளைத் தமிழ்நாட்டில் செய்திருக்கிறார்கள் என்று நாம் புள்ளிவிவரத்தோடு அடுக்கிய பிறகு, அவர்கள் பெருமையாகப் பேசிவந்த ‘குஜராத் மாடல்’ பற்றி, இப்போது மறந்தும் கூட பேசுவதில்லை.

இது ஒரு பக்கம் என்றால் – இன்னொரு பக்கம், நன்றாக இருந்த இந்தியாவின் பொதுத்துறை கட்டமைப்பையும் சீரழித்து, சின்னாபின்னமாக்கிவிட்டார்கள். தங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு அதை மடைமாற்றும் செயலை மட்டுமே செய்துகொண்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன் என்பது – சிலரின் நலனாக சுருங்கிவிட்டது. அரசுக்குச் சொந்தமான ‘ஏர் இந்தியா’ நிறுவனம், இப்போது தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டது.

இந்தியா முழுவதும் இருக்கும் விமான நிலையங்களும், துறைமுகங்களும் தனியார் கைக்குப் போகிறது. பிரதமர் மோடி சொன்னதுபோல், உழவர்களின் வருமானமும் இரண்டு மடங்கு ஆகவில்லை; ஏழை பாழைகளின் வாழ்க்கைத்தரமும் உயரவில்லை. இதை எல்லாம் மறைப்பதற்காகத்தான் மதவாதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி, அதில் குளிர் காயப் பார்க்கிறார்கள்.

2024 தேர்தல் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட – யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தீர்மானிக்க வேண்டிய தேர்தல். 9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில், மாநிலங்களை அழிக்கின்ற படுபாதகமான பல மோசடிகள் செய்யப்பட்டிருக்கிறது. மாநிலங்களின் நிதி உரிமையை முழுவதுமாக பறித்துவிட்டது ஜி.எஸ்.டி. இதனால், தமிழ்நாட்டிற்கு நிதி சுயாட்சி உரிமை பறிபோனதுதான் மிச்சம். ஜி.எஸ்.டி இழப்பீட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் ஒன்றிய அரசு அதை ஏற்கவில்லை.

ஒன்றிய அரசுக்கு வரியாக, தமிழ்நாடு ஏராளமான நிதியை ஆண்டுதோறும் தருகிறது. அதே நேரத்தில், தமிழ்நாடு ஒன்றிய அரசிற்கு வரி வருவாயாக செலுத்துகிற ஒவ்வொரு ரூபாய்க்கும் ஈடாக, 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. 2014 முதல் கடந்த ஆண்டு வரை நம் மாநிலம் ஒன்றிய அரசுக்கு கொடுத்த வரி 5 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், வரிப் பகிர்வாக, நமக்குத் திரும்ப கிடைத்தது என்னவோ, வெறும் 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய்தான். பெற்றதை முழுவதுமாகத் தர முடியாது என்று சொன்னால் – பா.ஜ.க. ஆளுகிற மாநிலத்திற்கு மட்டும் எப்படி கொடுக்க முடிகிறது? பா.ஜ.க. ஆளும் ஒரு மாநிலம் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய்தான் வரியாகக் கொடுத்திருக்கிறது.

ஆனால் வரிப் பகிர்வாக, 9 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றிருக்கிறது. இதைத்தான் ஓரவஞ்சனை என்று சொல்கிறோம். இவ்வாறு எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் ஆட்சியாக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது. ஒன்றிய நிதிக்குழு ஒதுக்கீட்டில் தமிழ்நாடு தொடர்ந்து பெரும் நிதி இழப்பைச் சந்தித்து வருகிறது. 12-ஆவது நிதிக்குழுவில் 5.305 விழுக்காடாக இருந்த நிதி ஒதுக்கிடு, 15-ஆவது நிதிக் குழுவில் 4.079 விழுக்காடாக குறைந்திருக்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு இழக்கின்ற நிதி கொஞ்சம் நஞ்சமல்ல. நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய 72,311 கோடி ரூபாயை நாம் இழந்திருக்கிறோம். பல திட்டங்களுக்கான பெரும் பங்கு மாநில அரசால்தான் வழங்கப்படுகிறது.

ஆனால் அதற்கான பெயர் மட்டும் ஒன்றிய அரசுக்கு வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு முத்திரைத் திட்டங்கள் என்று ஒன்று கூட இந்த 9 வருடங்களில் தரவில்லை. மாநிலங்களைப் பழிவாங்குகிற அரசாக இப்போதைய ஒன்றிய பா.ஜ.க. அரசு இருக்கிறது. மக்களுக்கு நேரடியாக நன்மை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிற மாநில அரசுகளை சிதைப்பதையே நோக்கமாக வைத்திருக்கிறார்கள். இது மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் சிதைக்கப் பார்க்கிறார்கள்.

பா.ஜ.க.வின் வகுப்புவாத – வெறுப்பு அரசியலுக்கு மணிப்பூரும் ஹரியாணாவும் பலியானதைப்போல மொத்த இந்தியாவும் பலியாகிவிடாமல் தடுக்க வேண்டும் என்றால், இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்.

இதற்கான ஆரம்பகட்ட ஆலோசனைக் கூட்டங்கள் பாட்னாவிலும், பெங்களூரிலும், மும்பையிலும் நடந்துள்ளன. பன்முகத்தன்மை கொண்ட பண்பட்ட இந்தியாவைச் செதுக்குவோம்! இந்தியாவைக் காப்போம். அதற்காக முதலில் இந்தியாவுக்காகப் பேசுவோம்!

இனி இது மு.க.ஸ்டாலின் குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலாக அமையும். எனது குரலை இந்தியாவின் குரலாக எல்லோரிடத்திலும் எடுத்துச் செல்லுங்கள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

More in அரசியல்

To Top