Connect with us

Raj News Tamil

விளையாட்டில் பெரிய உச்சங்களும் உண்டு, தாழ்ச்சிகளும் உண்டு: ராகுல் டிராவிட்!

விளையாட்டு

விளையாட்டில் பெரிய உச்சங்களும் உண்டு, தாழ்ச்சிகளும் உண்டு: ராகுல் டிராவிட்!

அகமதாபாதில் நடைபெற்ற 13-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று, 6-வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது.

கடந்த டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியிலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதியில் இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், இப்போது ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் தோல்வி கண்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல் திராவிட், “நான் இந்த 3 தோல்விகளிலும் பயிற்சியாளராக இருந்தேன், அன்றைய தினங்களில் நாங்கள் சரியாக ஆடவில்லை. டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் (இங்கிலாந்துக்கு எதிராக) கொஞ்சம் குறைவாக ஆடினோம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் முதல் நாளே ஆட்டத்தை இழந்து விட்டோம், ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்த பிறகு அன்று சரியாக வீசவில்லை. இங்கு இப்போது உலகக் கோப்பையில் பேட்டிங் சரியாகச் செய்யவில்லை. ஆனால் இந்தத் தோல்விகளுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட காரணத்தை வலியுறுத்தி கூற முடியாது. இந்த இறுதிப் போட்டியில் கூட ஒரு கட்டத்தில் கூட வீரர்கள் பெரிய போட்டி என்பதன் அச்சுறுத்தலையோ, பதற்றத்தையோ தங்கள் மீது ஏற்றிக் கொள்ளவில்லை என்று கூற முடியும். இந்தப் போட்டிக்கும் முன்பான வீரர்களின் ஆற்றலுணர்வும், மனப்போக்கும் பக்காவாக இருந்தது.

ரோகித் சர்மா ஒரு அற்புதமான தலைவராகச் செயல்படுகிறார். வீரர்களிடத்தில் ஓய்வறையில் தன் நேரத்தை செலவிடுகிறார். நிறைய திட்டங்கள், நிறைய உத்திகளை விவாதிக்கிறோம் ரோகித் இதிலெல்லாம் மிகுந்த ஈடுபாடு காட்டினார். அவரது பேட்டிங் நமக்கு எத்தனை பெரிய ஊக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

நாங்கள் பாசிட்டிவ், அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆடினோம். ரோகித் சர்மா அத்தகைய அணுகுமுறைக்கான தன்னுடைய கடமையை உணர்ந்து ஆடினார். தொடர் முழுதுமே ரோகித் சர்மா அற்புதம்தான். ஒரு நபராகவும் ஒரு தலைவராகவும் அவரைப் பற்றி இதற்கு மேல் என்ன வேண்டும்.

ஓய்வறையில் நிறைய உணர்ச்சி முகங்கள், ஒரு பயிற்சியாளராக ஏமாற்றமடைந்த முகங்களைக் காண்பது கடினமாக உள்ளது. ஏனெனில் இவர்கள் எப்படி உழைத்தார்கள் என்பதை நான் அறிவேன். நிறைய தியாகங்களைச் செய்தார்கள். ஆனால், விளையாட்டின் தார்மிகம் இதுதானே. அது நிகழ்கிறது, இதுவும் நடக்கும் அவ்வளவுதான். ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த அணி நம்மை விட சிறப்பாக ஆடுகிறதோ அந்த அணி வெல்லும். இது விளையாட்டு விதி. நாளை சூரியன் உதிக்கவே செய்யும். நாம் இதிலிருந்து கற்றுக் கொள்வோம். சிந்திப்போம்… மேலே செல்வோம்.

ஒரு விளையாட்டு வீரனாக இதைத்தான் செய்ய முடியும். விளையாட்டில் பெரிய உச்சங்களும் உண்டு, தாழ்ச்சிகளும் உண்டு. ஆனால் மேலே சென்று கொண்டிருக்க வேண்டுமே தவிர நிறுத்தி விடக்கூடாது” என்றார் ராகுல் டிராவிட்.

More in விளையாட்டு

To Top