Connect with us

Raj News Tamil

நம்பியவர்களின் முதுகில் குத்தும் கட்சி காங்கிரஸ்: பிரதமர் மோடி!

இந்தியா

நம்பியவர்களின் முதுகில் குத்தும் கட்சி காங்கிரஸ்: பிரதமர் மோடி!

நம்பியவர்களின் முதுகில் குத்தும் கட்சி காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ள சூரஜ்பூர் நகரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான் சத்தீஸ்கர் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இன்று ஒட்டுமொத்த சத்தீஸ்கரும் பாஜகவின் பக்கம் நிற்கிறது. சத்தீஸ்கரில் இன்று முதற்கட்டத் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மக்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் வாக்களித்து வருகிறார்கள்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பழங்குடி மக்களின் நலனில் காங்கிரஸ் கட்சி எவ்வித அக்கரையையும் காட்டவில்லை. பழங்குடி மக்களின் குழந்தைகளின் கல்வி குறித்த எவ்வித சிந்தனையும் அந்த கட்சிக்கு இருக்கவில்லை. ஆனால், பழங்குடி மக்களின் நலனில் பாஜக எப்போதுமே அக்கரையுடன் இருந்து வருகிறது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நாட்டின் குடியரசுத் தலைவராக வருவார் என உங்களில் யாராவது நினைத்துப் பார்த்தது உண்டா? ஆனால், பாஜக அதனை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. திரவுபதி முர்மு குடியரசுத் தலைவராக ஆகிவிடக் கூடாது என காங்கிரஸ் முயன்றது. அவர் குடியரசுத் தலைவராவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என அது பாடுபட்டது. ஆனால், பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நாட்டின் குடியரசுத் தலைவராக வேண்டும் என்பதை உறுதிப்படுத்திய கட்சி பாஜக.

பழங்குடி மக்களின் குழந்தைகளின் கல்விக்காக பணம் செலவழிப்பது வீண் என்று காங்கிரஸ் கருதியது. ஆனால், பழங்குடி மக்களின் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கிய கட்சி பாஜக. காங்கிரஸ் காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட 5 மடங்கு அதிக நிதி பழங்குடி மக்களின் கல்வி வளர்ச்சிக்காக பாஜக ஒதுக்கி இருக்கிறது. அதன் காரணமாகவே, தற்போது பழங்குடி மக்கள் நல்ல கல்வியைப் பெற்று வருகிறார்கள். 500 புதிய ஏகலவ்ய மாதிரி பள்ளிகள் பழங்குடியினர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம், பயங்கரவாதிகள் மற்றும் நக்சல் தீவிரவாதிகளின் துணிச்சல் அதிகரிக்கிறது. நக்சல் தீவிரவாதிகளால் ஏற்படும் வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிட்டது. சமீப காலங்களில் நக்சல் தீவிரவாதத்துக்கு பாஜகவைச் சேர்ந்த பலர் இரையாகி இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்புகூட பாஜக பிரமுகர் ஒருவர் நக்சல் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மனிதர்களைக் கடத்தி பணம் பறிப்பது, போதைப் பொருள் வியாபாரம் ஆகியவை அதிகரிக்கின்றன. நமது சகோதரிகளும், மகள்களும் அதற்கு இலக்காகிறார்கள். பழங்குடி குடும்பங்களைச் சேர்ந்த பல பெண் குழந்தைகள் காணாமல் போகின்றனர். இதற்கு காங்கிரஸ் தலைவர்களிடம் எந்த பதிலும் கிடையாது. நம்பியவர்களின் முதுகில் குத்தும் கட்சி காங்கிரஸ். சத்தீஸ்கரின் இளைஞர்களின் கனவுகளை நனவாக்காத கட்சி காங்கிரஸ். மகாதேவர் (சிவபெருமான்) பெயரிலும் ஊழல் செய்யும் கட்சி காங்கிரஸ். மகாதேவ் பந்தைய ஊழல் குறித்து இன்று நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. உங்கள் பிள்ளைகளை பந்தையம் கட்ட வைத்து தனது கஜானாவை நிரப்பிக்கொள்கிறது காங்கிரஸ். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை நீங்கள் மன்னிப்பீர்களா?” எனத் தெரிவித்தார்.

More in இந்தியா

To Top