Connect with us

Raj News Tamil

7 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட்!

இந்தியா

7 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட்!

டிஎஸ்-சார் உட்பட 7 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் வாயிலாக இன்று (ஜூலை 30) காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நாட்டுக்குத் தேவையான தகவல் தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதனுடன், வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது. அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான ‘டிஎஸ்-சார்’ எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தச் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஏவுதலில் முதன்மைச் செயற்கைக்கோளான டிஎஸ்-சார் செயற்கைக்கோள் 352 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சா் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இரவு, பகல் என அனைத்து பருவநிலையிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும்.

இதனுடன் வெலாக்ஸ்-ஏஎம் (23 கிலோ), ஆா்கேட் (24 கிலோ), ஸ்கூப் (24 கிலோ), நியூலயன் (3 கிலோ), கலாசியா (3.5கிலோ), ஆா்ப்-12 ஸ்டிரைடா் (13 கிலோ) ஆகிய 6 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பல்வேறு விதமான தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனா். முன்னதாக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

More in இந்தியா

To Top