தமிழகம்
களைகட்டிய ரம்ஜான் கொண்டாட்டம்: சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!
ரம்ஜான் பண்டிகையையொட்டி காலையிலேயே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை தமிழ்நாட்டில் இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை மேற்கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர்.
சென்னை தீவுத்திடலில் நடந்த சிறப்பு தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
புனித மாதம் ரமலானில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைப்பிடிப்பார்கள்.. ஒரு மாதம் வரை இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சாயங்காலம் வரை உணவு உண்பதை நிறுத்தி விரதம் இருப்பார்கள்.
இந்த காலக்கட்டத்தில் நோன்புக்கு முன்பு சஹர் என்ற உணவும், நோன்பிற்கு பிறகு மாலை நேரத்தில் இப்தார் விருந்துடன் உணவு எடுத்து கொள்வார்கள். இந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.. அன்று முதல் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர்.
பொதுவாக ரம்ஜான் பண்டிகை என்பது வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. இதனால் பல இடங்களில் ரம்ஜான் பண்டிகையின் தேதி என்பது மாறுபடும். இந்நிலையில் தான் தமிழகத்தில் நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகைக்கான பிறை பார்க்கப்பட்டது. அப்போது பிறை தெரியவில்லை.
இதையடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அரசு தலைமை காஜி சலாவூதின் முகமது அயூப் அறிவித்தார். அதன்படி இன்று தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை களைகட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.