தமிழகம்
ரயில் நிலையத்தில் போதையில் தள்ளாடி வந்த இளைஞர்; வலி நிவாரண மாத்திரைகள் போலீசார் பறிமுதல்!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து ரயில் மூலம் மாற்றுப் போதைக்காக பயன்படுத்தும் வலி நிவாரண மாத்திரைகளை கடத்தி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் சோதனைகளில் ஈடுபட்டனர்.
அப்போது போதையில் இளைஞர் ஒருவர் தள்ளாடிக் கொண்டு வந்துள்ளார். சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர் கையில் வைத்திருந்த டிராவல் பேக்கை சோதனை செய்து பார்த்த போது கட்டு கட்டாக வலி நிவாரண மாத்திரைகள் இருந்துள்ளது.
போதையில் வந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் சென்னை அம்பத்தூர் நேரு நகரில் உள்ள மலையாளத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த மனோஜ் (18) என தெரியவந்தது. அவர் ஹைதராபாத்தில் உள்ள முன்னா என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து அம்பத்தூர் பகுதியில் விற்பனை செய்வது தெரிய வந்தது.
மனோஜை கைது செய்த காவல்துறையினர் (NITRAVET 10 MG ) என்ற வலி நிவாரண மாத்திரைகள் 229 அட்டைகள் கொண்ட 6,890 மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.