அரசியல்
பாஜகவை தோற்கடிக்க பாட்னாவில் ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்..பல மாநில முதல்வர்கள் சந்திப்பு
பீகார் தலைநகர் பாட்னாவில் பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சென்றுள்ளனர்.
இந்த கூட்டம் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் வீட்டில் காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் ஆகியோர் இன்று பாட்னா வந்துள்ளனர்.
“இந்தக் கூட்டம் வரலாற்றில் இடம்பெறப் போகிறது. பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் கூடியிருப்பது, பாஜகவுக்கு எதிரான சக்திகளுக்கு இடையே உருவாகி இருக்கும் ஒற்றுமையை எதிரொலிக்கிறது. வரும் பொதுத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடித்து, மோடியை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவதில் இந்த எதிர்க்கட்சிகளின் முன்னணி முக்கிய பங்காற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்தவரும், மாநில அமைச்சருமான விஜயகுமார் சவுத்ரி பேசியுள்ளார்.
You must be logged in to post a comment Login