இந்தியா
ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞர் – தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த சூராரம் பகுதியைச் சேர்ந்தவர் நானி(26). அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவ பரிசோதனை மையத்தில் லேப் டெக்னீஷியனாக இவர் பணியாற்றி வருகிறார். அங்கு வரும் இளம் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதோடு அவர்களது செல்போன் எண்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஆபாச மெசேஜ் அனுப்புவதையும் இவர் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
இது குறித்து சில பெண்கள், அந்த மருத்துவ பரிசோதனை மையத்தின் உரிமையாளரிடம் புகார் கூறியுள்ளனர். உரிமையாளர் எச்சரித்தும் நானியின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லாததால் கோபமடைந்த பெண்கள் நானியை சரமாரியாக அடித்து, துவைத்தனர். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்களும் நானியை வெளுத்து வாங்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நானியை மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நானி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.